
அகராதி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும் கிட்டதட்ட நெகிழ்ச்சியாகவே முடிந்தது. இப்படத்தின் இசையமைப்பாளர் சுந்தர் சி. பாபு மறைந்த இசையமைப்பாளர் மகேஷ் நினைவு அறக்கட்டளைக்காக ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார். தனது உரையில் சற்றே கண்கலங்கிய சுந்தர் சி பாபு, மகேஷ் பற்றியும் சில வார்த்தைகள் பேசினார்.
பி.சி.ஸ்ரீராம் சாரோட வானம் வசப்படும் படம்தான் மகேஷ் இசையமைத்த முதலும் கடைசியுமான படம். அடையார் கேன்சர் இன்டியூட்டில் உடம்பு சரியில்லாத போதுதான் அந்த படத்திற்கு கம்போஸ் பண்ணினோம். இரத்த வாந்தி எடுத்துகிட்டே அவரு மியூசிக் கம்போஸ் பண்ணியதை என்னால் மறக்கவே முடியாதது. அவருடைய மனைவி சித்ரா நடத்தி வரும் அறக்கட்டளைக்காக ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்குகிறேன் என்றார். பிறகு சுந்தர் பேசியது செம கலகலப்பு. டைரக்டர் நாகா வெங்கடேஷ் ரொம்ப ராசியானவரு. அஞ்சாதே படத்திற்கு பிறகுதான் என்னை இந்த படத்திலே கமிட் பண்ணினாரு. அதுக்கு பிறகு ஆறு படங்கள் சைன் பண்ணினேன். அதில் மூன்று படங்கள் வெளிவந்து நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திச்சு. ஹீரோயின் மோனிகாவுக்கு கூட இவரு அட்வான்ஸ் கொடுத்த பிறகு நிறைய படங்கள். இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடியாதபடி பிசியாயிட்டாங்க. இந்த படத்தின் தயாரிப்பாளர் வரத் சின்ன தயாரிப்பாளர்னு சொல்றாங்க. அதெல்லாம் இல்லே. மிக்சிங் எங்கே பண்ணினா நல்லாயிருக்கும்னு கேட்டாரு. நான் லண்டன்ல பண்ணலாம்னு சொன்னதும், அதுக்கான ஏற்பாடுகளை முகம் சுளிக்காம செஞ்சு கொடுத்தார்” என்றார்.
விழாவில் கலந்து கொண்ட இன்னொரு பிரபலமான ராகவேந்திரா லாரன்சையும், இசையைமப்பாளர் சுந்தர் சி பாபுவையும் அவர்களின் நல்ல மனசுக்காக வாழ்த்தினார் இயக்குனர் கே.பாக்யராஜ். “சிலர் சொத்துக்களா வாங்கி போட்டுக் கொண்டே இருக்காங்க. அதெல்லாம் எங்கே இருக்குன்னு கூட அவங்களால நினைவு வச்சுக்க முடியாதளவுக்கு வாங்குறாங்க. அவங்களுக்கு மத்தியில் இப்படிப்பட்ட நல்லவங்களும் இருக்காங்க. நடிகர்கள் யாருமே செய்யாத செயலை செய்து வருகிற லாரன்சை நான் மனசார வணங்குறேன்” என்று பாக்யராஜ் சொல்ல, அரங்கத்தில் எக்கச்சக்க கைத்தட்டல்!
0 comments