மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் சார்பில் 2007ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
இதி்ல் `காஞ்சிவரம்' படத்துக்கு சிறந்த படத்துக்கான விருதும், அதில் நடித்த பிரகாஷ் ராஜுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது.
சிறந்த தமிழ் படம் `பெரியார்':
பிராந்திய மொழி படங்களில், தமிழில் சிறந்த படத்துக்கான விருது சத்யராஜ் நடித்த `பெரியார்' படத்துக்கு கிடைத்துள்ளது.
லிபர்ட்டி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஞானராஜசேகரன் இயக்கியிருந்தார். இவர் இயக்கிய `மோகமுள்' படத்திற்கும் ஏற்கனவே விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியில் `1971', மலையாளத்தில் `ஒரே கடல்', மராத்தியில் `நிரோப்', வங்க மொழியில் `பாலிகஞ்ச் கோர்ட்' ஆகிய படங்களுக்கும் சிறந்த பிராந்திய மொழி படங்களுக்கான விருது கிடைத்துள்ளது. ஆங்கிலத்தில் `தி லாஸ்ட் லியர்' படத்துக்கு விருது கிடைத்துள்ளது.
சிறந்த கார்ட்டூன் படம்-`இனிமே நாங்கதான்':
அதே போல தேசிய அளவில் சிறந்த கார்ட்டூன் (அனிமேஷன்) படமாக `இனிமே நாங்கதான்' என்ற தமிழ் படம் தேர்வு செய்யப்பட்டு விருது கிடைத்துள்ளது. 4 நண்பர்கள் ஒரு குகைக்குள் புதையலை தேடிச்செல்லும் காட்சிகளை சித்தரிக்கும் இந்த படத்தை மாயா பிம்பம் பட நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீதேவி தயாரித்திருந்தார்.
ஸ்பெஷல் எபெக்ட்ஸ் காட்சிகளுக்கான விருது ரஜினி நடித்த `சிவாஜி'யில் பணிபுரிந்த மெசர்ஸ் இந்தியன் ஆர்ட்டிஸ்ட் குழுவினருக்கு கிடைத்துள்ளது.
சிறந்த பின்னணி பாடகிக்கான விருது, `ஜாப் வி மெட்' என்ற படத்திற்காக ஸ்ரேயா கோஷாலுக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற `ஏ இஷா ஹை' என்ற பாடலுக்கு சிறந்த நடனக் காட்சிக்கான விருது வழங்கப்படுகிறது.
தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது , பவனா தல்வார் இயக்கிய மதங்களின் அடிப்படையை மையமாக கொண்ட `தர்ம்' என்ற படத்துக்கு வழங்கப்படுகிறது

"என்னடா... மார்ல சந்தனம்...?" "ஊர்ல கல்யாணம்ணே...!"
-ஒரு படத்தில் கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் இடையே நடக்கும் உரையாடல் இது.
யாருக்குப் பொருந்துகிறதே இல்லையோ... சிம்புவுக்கும் த்ரிஷாவுக்கும் இது கிட்டத்தட்டப் பொருந்தும்.
நகரில் எந்த நிகழ்ச்சியென்றாலும் முதலில் வந்து நிற்பவர்கள் இந்த இருவரும்தான்... அதுவும் ஜோடியாக. விண்ணத்தாண்டி வருவாயா படத்தில் இருவரும் ஜோடி என்றாலும், அதையும் தாண்டிய 'நட்பு' இருவரையும் இப்படி ஒன்றாகப் பிணைத்துவிட்டதாம்.
சமீபத்தில் சென்னை சத்யம் திரையரங்கில் ஒரு ஆங்கிலப் படத்தின் முன்னோட்டக் காட்சிகள் வெளியீட்டுக்கு பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்தக் காட்சி இரவு பத்து மணிக்குத்தான் துவங்கியது. முதலில் யார்-யார் வந்தார்கள் என்றே தெரியவில்லை. ஆனால் இடைவேளையின்போது பார்த்தால் சிம்புவும் - த்ரிஷாவும் நெருக்கமாக அமர்ந்து படத்தைப் பற்றி தீவிர டிஸ்கஷனில் இருந்தார்கள் (வேற என்னன்னு சொல்றது!).
இந்த படம் மட்டுமல்ல... கிட்டத்தட்ட எல்லா நிகழ்ச்சிகளுக்குமே இருவரும் இணைந்தே வருகிறார்கள். இருவரும் லவ்வுவதாக தொடர்ந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
ஆனால் எங்களுக்குள் காதல் இல்லை, நல்ல புரிதலுடன் கூடிய நெருக்கமான நட்புதான் என்று த்ரிஷா சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தனிமனிதன் கோபப்பட்டால் அதனை நாடு தாங்கிக் கொள்ள முடியாது.. அதைத்தான் எனது படத்தில் சொல்லியிருக்கிறேன் என்றார் நடிகர் [^] கமல்ஹாஸன்.
'உன்னை போல் ஒருவன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் கமல்ஹாசன்.
சரமாரியான கேள்விகளுக்கு அவர் கூறிய பதில்களின் தொகுப்பு:
நான் வழக்கறிஞராக வருவேன் என்று என் குடும்பத்தில் எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் நான் வேறு திசையில் பயணத்தை துவக்கினேன். அப்போது என் குடும்பத்தினர் இதற்காக மிகவும் வருந்தினர். ஆனால் இன்று பெருமைப்படுகின்றனர்.
அதே போல எனது மகள் அக்ஷரா எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை அவரே தீர்மானித்துக் கொள்வார்.
குழந்தை [^] வளர்ப்பு என்று வரும்போது மரத்தை வளர்ப்பது போலத்தான். தண்ணீர் ஊற்றி விட்டு வாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மட்டுமே பெற்றோர்களாகிய நம் பொறுப்பு.
என் அப்பா கொடுத்த சுதந்திரத்தில் 90 சதவீதம் கூட என் பிள்ளைகளுக்கு நான் கொடுக்கவில்லை. பரந்த மனப்பான்மை என் அப்பா எனக்கு கற்றுக் கொடுத்தது. சிறு வயதிலேயே படிப்பை நிறுத்தி விட்டு நடனம் கற்றுக் கொள்ள அனுமதிப்பது பெரிய விஷயம். நடனம் கற்றுக் கொண்ட பின்னர் உதவி நடன ஆசிரியராக இருக்கிறேன் என்று பந்தாவாக கூறிக் கொள்வேன்.
அப்போது எல்லோரும் பிழைப்புக்கு என்ன செய்வாய் என்று கேட்பார்கள். சினிமாவை பிழைப்பாக கூட ஏற்றுக் கொள்ளாத காலத்தில் என் தந்தை எனக்கு சுதந்திரம் கொடுத்தார். என் மகள் ஸ்ருதி அமெரிக்காவுக்கு இசை படிக்க சென்றபோது ஒரு தந்தையாக எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது. ஆனால் இப்போது பெருமிதமாக உள்ளது.
டிஜிட்டல் சினிமாதான் எதிர்காலம்!
டிஜிட்டல் சினிமாதான் திரைப்படத் துறையின் எதிர்காலம். இதனை நான் தீர்க்கதரிசனமாக சொல்லவில்லை. தொழில்நுட்பத்தை புரிந்து கொண்டதால் கூறுகிறேன். சினிமாவை எளிமைப்படுத்த வேண்டும்என்பதே எனது விருப்பம். டிஜிட்டல் முறையில் எடுக்கப்பட்ட "மும்பை எக்ஸ்பிரஸ்' அதன் துவக்கம்.
திரைப்படங்களை உருவாக்குவது மட்டுமல்ல, வெளியிடுவது மற்றும் விநியோகிப்பதிலும் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றும்.
'உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம் இந்திப் படத்தின் தழுவல் என்றாலும் தமிழக சூழலுக்கேற்ப வசனங்கள் உட்பட பல மாற்றங்களை செய்திருக்கிறோம்.
இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் பிரச்சனைகள் வேறுபடுகிறது. எனினும் தீவிரவாதம் போன்ற பிரச்சனை நாடு முழுவதும் உள்ளது. தீவிரவாதம் இங்கேயும் இருக்கிறது. ஆனால் நமக்கு தெரியாமல் மறைந்திருக்கிறது. ஒரு தனிமனிதன் கோபப்பட்டால் நாடு தாங்காது என்பதை இந்த படத்தின் மூலம் காண்பித்திருக்கி றோம். மக்கள் [^] தொகையின் ஒரு சதவீதம் பேர் கோபப்பட ஆரம்பித்தால் கூட நம்முடைய ராணுவத்தால் கூட கட்டுப்படுத்த முடியாது.
இந்த படத்திற்கான தலைப்பு ஜெயகாந்தன் எழுதிய நாவலின் தலைப்பாகும். அவரிடம் நேரில் சென்று இந்த தலைப்பை பயன்படுத்துவதற்கான அனுமதி கடிதம் பெற்றேன். பழமையைப் போற்றுவதில் தவறில்லை. அதே போல நல்ல எழுத்தாளர்களை திரைப்படத்தில் பயன்படுத்த விரும்புகிறேன்.
கவிஞர் மனுஷ்ய புத்ரன் மற்றும் இரா.முருகன் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர். இந்திப் படத்தில் பாத்திரங்கள் கெட்ட வார்த்தைகளை அதிகம் பேசும். ஆனால் அதை ஆபாசம் என்று சொல்ல முடியாது. ஆபாசம் எது என்பதற்கு ஒரு வரையறை இல்லை. தஞ்சை வாணன் கோர்வை, விரலி விடு தூது போன்றவைகூட ஆபாசமானவைதான்.
பொதுவாக ஜெயகாந்தன் போன்ற இலக்கியவாதிகளுக்கு இருக்கும் சுதந்திரம் திரைக்கதை ஆசிரியர்களுக்கு இருப்பதில்லை. எனக்கு 3 வயதாக இருந்த போது அமலில் இருந்த சென்சார் சட்டங்களைத்தான் இப்போதும் பயன்படுத்துகிறோம். சென்சார் சட்டங்களில் மாற்றம் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.
நல்ல படங்கள் வராதா?
சில ஆண்டுகளுக்கு முன்னர் டிவியால் நாடகங்கள் பாதிக்கப்படு வதாக கூறப்பட்டபோது, கோமல் சுவாமிநாதன், தமிழ் நாடகங்களே தமிழ் நாடகங்களை கெடுப்பதாக கூறினார். அதையே நான் இப்போது பதிலாக கூற விரும்புகிறேன். தமிழ் படங்களின் கருத்தை ரசிகர்கள் முடிவு செய்ய துவங்கி விட்டனர்.
திரையுலகில் பொன்விழா கொண்டாட்டம் பற்றி கேட்கிறார்கள்.
நானே நடித்து விட்டு நானே கைதட்டி கொண்டால் நன்றாக இருக்காது. இந்த வாய்ப்பை எனக்கான அனுமதிச்சீட்டாக கருதி தொடர்ந்து சிறப்பாக நடிக்க விரும்புகிறேன்.
அதேபோல எல்டாம்ஸ் சாலைக்கு எனது பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றி நான் கருத்து கூற முடியாது. இது குறித்து ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ நான் பேசினால் தேவையற்ற மனச்சங்கடங்கள்தான் மிஞ்சும்...,என்றார் கமல்.

கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படுவதாக இருந்த 55வது தேசிய திரைப்பட விருதுகள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவையொட்டி தள்ளிவைக்கப்பட்டு, இன்று அறிவிக்கப்பட்டன.
2007 ஆம் ஆண்டுக்கான இந்த விருதுகளை சாய் பராஞ்பே தலைமையிலான நடுவர் குழு சுமார் 120 திரைப்படங்களிலிருந்து தேர்வு செய்துள்ளது.
ப்ரியதர்ஷன் எழுதி, இயக்கிய காஞ்சீவரம் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரு விருதுகளை பெற்றுள்ளது. சுதந்திர காலத்துக்கு முந்தைய காஞ்சி பட்டு நெசவாளர்களின் வறுமை மிகுந்த வாழ்க்கையை இந்தப் படத்தில் உயிரோட்டமாக செதுக்கியிருந்தார் ப்ரியதர்ஷன். இந்தப் படத்தில் நெசவாளராக பிரதான வேடத்தில் நடித்த பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கன்னடத்தின் புகழ்பெற்ற இயக்குனர் கிரிஷ் காசரவல்லி இயக்கிய குலாபி டாக்கீஸ் படத்தில் நடித்த உமா ஸ்ரீ சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஷாருக்கான் நடித்த சக் தே இந்தியா சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த குடும்ப நல படமாக தாரே ஜமீன் பர் தேர்வாகியுள்ளது. அமீர்கான் இயக்கிய முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் மேரி மா என்று தொடங்கும் பாடலை பாடிய சங்கர் மகாதேவன் சிறந்த பாடகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காந்திக்கும் அவரது மூத்த மகனுக்கும் இடையிலான உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட காந்தி மை ஃபாதர் மூன்று விருதுகளை வென்றுள்ளது. இந்தப் படத்துக்காக பெரோஸ் அப்பாஸ் சிறந்த திரைக்கதைக்கான விருதையும், தர்ஷன் ஜாரிவாலா சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பெறுகின்றனர்.
சிறந்த இயக்குனராக அடூர் கோபாலகிருஷ்ணன் ஏழாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவொரு சாதனை. தகழி சிவசங்கரபிள்ளையின் கதைகளை தழுவி அவர் எடுத்த நாலு பெண்ணுங்கள் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான விருது அவருக்கு கிடைத்துள்ளது.
பல வருடங்களுக்குப் பிறகு தமிழுக்கு சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் என்ற இருபெரும் விருதுகள் கிடைத்துள்ளன. வாழ்த்துக்குரியவர் இயக்குனர் ப்ரியதர்ஷன்.

கமல்ஹாசன் தற்போது குடியிருக்கும் எல்டாம்ஸ் சாலைக்குக் கமல் பெயரை வைக்க வேண்டும் என்று அரசுக்கு நடிகர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது குறித்து கமல்ஹாசனிடம் கேட்டால், தனக்கேயுரிய நகைச்சுவையோடு பதில் சொன்னார்.
இந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொன்னாலும் தப்பு. அற்புதமான திட்டம் என்று சொன்னால் அது தற்பெருமை ஆகிவிடும். விரும்பவில்லை என்று சொன்னால் அகம்பாவம் ஆகிவிடும். அதனால் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை என்றார். அட அட! பட்டுக்கொள்ளாமல் பதிலளிப்பதில் கமலுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.
உன்னைப் போல் ஒருவன் படத்திற்கு பிறகு கமல் ஒரு படத்தை டைரக்ட் செய்யப் போகிறாராம். இதில் பாலசந்தர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவரிடம் இந்த கதையைச் சொன்னபோது மிகவும் ரசித்ததாகக் கூறிய கமல், மிஷ்கினுடன் இணையும் படத்தை இந்த படத்திற்குப் பிறகு தள்ளி போட்டிருக்கிறார். அது எப்படிப்பட்ட படமாக இருக்கும்? சரித்திரப் படம் என்று தகவல் வந்ததே என்ற கேள்விகளுக்குப் பதில் சொன்னார் கமல். இது சரித்திரப் படம் என்பதைவிட, சரித்திர காலப் படம் என்பது சரியாக இருக்கும் என்றார்.
ஆஹா, நாம எழுதிய மாதிரி புத்தரின் கதையேதான் போலிருக்கிறது.

வேலூர்: செருப்பு அணிந்தபடி கிரிவலம் வந்த ஸ்னேகாவின் செயலைக் கண்டித்து வேலூரில் அவரது படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் அனுமன் சேனா என்ற இயக்கத்தினர்.
நடிகை ஸ்னேகா சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கோவிலைச் சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தூரத்தை கிரிவலமாக வந்தார்.
கிரிவலம் செல்லும் பக்தர்கள் காலில் செருப்பு அணிந்து செல்லக் கூடாது என்பது வழிவழியாகக் கடைப்பிடிக்கப்படும் மரவு. மண்ரோடாக இருந்த காலத்திலேயே யாரும் செருப்பணிந்து நடக்கமாட்டார்கள். இப்போது நல்ல சாலை போடப்பட்டுள்ளது. ஆனால் நடிகை ஸ்னேகா கிரிவலத்தின் போது காலில் செருப்பு அணிந்து சென்றார். இது புகைப்படத்துடன் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில், அகில பாரத அனுமன் சேனா என்ற இயக்கத்தின் வேலூர் கிளையினர் ஸ்னேகா உருவப்படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று காலை வேலூர் டவுன் மூங்கில்மண்டிதெரு பகுதியில் ஸ்னேகா உருவப்படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து, கைகளில் காவிக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் வந்து கலைத்தனர்.