
என்னால் ஒரு பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாவிட்டாலும், என் படங்கள் இந்த சமூகத்தைப் பிரதிபலிக்கக் கூடியவையாக இருக்கும் என்றார் கமல்ஹாசன்.
இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "விரைவில் வெளிவரவுள்ள 'உன்னைப்போல் ஒருவன்,' இந்தியில் வெளியான 'எ வெட்னஸ் டே' என்ற படத்தின் தழுவல்தான் என்றாலும், அந்தப் படத்தை அப்படியே 'காப்பி' அடிக்கவில்லை.
அது, புதன்கிழமையாக இல்லாமல், வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையாக கூட இருக்கலாம்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருந்தாலும், மாநிலங்களுக்கு மாநிலம் அரசியல் வேறுபட்டு இருக்கும். அதுபோல் என் படம் ஒரு வித்தியாசமான சிந்தனையாக இருக்கும்.
எனக்கு திரைப்படம் இயக்குவது மிகவும் பிடிக்கும். நம் கதையை நாமே கையாள்வதில் உள்ள சுகம் அலாதியானது.
கடந்த 20 வருடங்களாக நான் ஓய்வே எடுத்துக்கொள்ளவில்லை. வேலை செய்வது எனக்கு சந்தோஷத்தை தருகிறது. அதனால் ஓய்வு பற்றி சிந்திப்பதில்லை.
என்னால் சமுதாயத்தை மாற்ற முடியாது. ஆனால், என் படங்கள் இந்த சமுதாயத்தை பிரதிபலிக்கும்," என்றார் கமல்ஹாசன்.
மகள் ஸ்ருதி பற்றி கூறுகையில், "என் மகள் ஸ்ருதி சினிமாவில் நடிப்பது பற்றி, நான் அவளுக்கு அறிவுரை எதுவும் சொல்வதில்லை. அவளுடைய வயதில் எனக்கு யாராவது அறிவுரை சொன்னால் பிடிக்காது. பொதுவாகவே அறிவுரை சொல்வது எனக்கு பிடிக்காத விஷயம்.
ஸ்ருதிக்கு நான் சுதந்திரம் கொடுத்து இருக்கிறேன். ஸ்ருதிக்கு நடிப்பை விட, இசை நன்றாக வருகிறது. அவள் முயற்சி செய்தால், இசையில் பெயர் வாங்க முடியும். எனது 'உன்னைப்போல் ஒருவன்' படத்துக்கு சுருதி மிக சிறப்பாக இசையமைத்து வருகிறாள்," என்றார் அவர்.
வரும் படங்களில் ஸ்ருதியையும் நடிக்க வைப்பீர்களா? என்ற கேள்விக்கு, அவருக்குப் பொருத்தமான வேடமிருந்து அதில் அவர் நடிக்க விரும்பினால் தாராளமாக நடிக்கலாம், என்றார்.
0 comments