அ.தி.மு.க-வில் அஜீத்

Posted by tamilteching Wednesday, August 26, 2009

ராகுல்காந்தி இளையதளபதியைச் சந்திக்க நேரம் ஒதுக்கி இருவரும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் என்பதுதான் இப்போது பரபரப்புச் செய்தியாக பற்றிக் கொண்டிருக்கிறது. விஜய் அப்படியே போய் காங்கிரஸில் சேரப் போகிறார்... இளைஞர் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பு கொடுக்கப் போகிறார்கள் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.


ஆனால், இதேபோல பல சந்திப்புக்கள் நம் தமிழக அரசியல் அரங்கில் நடந்து முடிந்திருக்கிறது. அதுபற்றி யாருக்கும் தகவல் போய்ச் சேரவில்லை.


இதோ தெனாலி தரும் எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்...


அறிவாலயத்தில் தலைவரின் அறை...


‘ஆதவனே வருக...’ என்று அமர்த்தலான சிரிப்போடு கலைஞர் அழைக்க மந்திரிக்கப் பட்ட கோழி போல உள்ளே நுழைந்தார் சூர்யா.


‘தலைவரே... அசத்திட்டீங்க... டாபிகலாகவும் டைமிங்காகவும் மட்டுமல்ல... டச்சிங்காகவும் இருக்கு... உங்க வாயிலிருந்து இந்த வார்த்தைகளைக் கேட்கும்போது எனக்கு திரும்பவும் பொதுப்பணித்துறையே கிடைச்சுட்ட மாதிரி புல்லரிச்சுப் போகுது...’ என்று வளைந்து நெளிந்து வாயெல்லாம் பல்லாகச் சிரித்தார் துரைமுருகன்.


அவர் பக்கமே திரும்பாமல், ‘என்ன ஆதவா... உதயநிதி படத்தைப் போட்டுக் காட்டினான்... உன் கண்களில் தெரிந்த அரசியல் ஒளியை நான் அப்போதே அடையாளங் கண்டு கொண்டேன்... அதனால்தான், இனியும் தாமதிக்கக் கூடாதுனு அழைத்து வரச் சொல்லிவிட்டேன். பத்திரிகையாளர்களைச் சந்திச்சு பேசிடலாமா... தளபதி வகித்த இளைஞர் அணி தலைமைப் பொறுப்பை நீ எடுத்துக்கோ! துரை தயாநிதிகிட்டே கூட பேசிட்டேன்... அவனுக்கும் இதிலே வருத்தம் ஏதுமில்லைனு சொல்லிட்டான்... அதனால், தயங்காமல் தைரியமாக பதவியை ஏத்துக்கோ...’ என்று கலைஞர் பேசிக் கொண்டே போக, மஞ்சள் தண்ணீர் ஊற்றிய ஆடு போல கண் இமைக்காமல் நின்று கொண்டிருந்தார் சூர்யா.


‘ஐயா... எனக்கு அரசியல் சரிப்பட்டு வராது... மேடையில் மேட்டரை தவிர உங்கள மாதிரி அடுக்கு மொழி பேச தெரியாது. நான் நடிகனா சாதிக்கவேண்டியது ஏராளமா இருக்கு...’ என்ற சூர்யாவை இடைமறித்தார் கலைஞர்.


’இளவலே... இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை... என் கதை வசனத்தில் ஒரு படம் நடித்தால் போதும்... மேடைப் பேச்சு தானாக வரும்... என்ன சொல்றே..?’ என்றார்.


’அதுக்கு பிரசாந்த் மாதிரி முடி வளர்க்கணுமே... நான் இப்போ சிங்கத்துக்காக முடியை ஒட்ட வெட்டிட்டேன்... வளர்ந்ததும் வந்துடட்டுமா...‘ என்று எஸ்கேப் ஆனார் சூர்யா!


காருக்குள் உட்கார்ந்திருந்த அஜீத்தின் கண்களில் மிரட்சி தெரிந்தது.


‘ஏங்க... சிங்கப்பூருல அசல் ஷூட்டிங்னு சொல்லித்தானே காருல ஏத்துனீங்க... இப்போ காருலேயே கண்டபடி போறீங்க... சிங்கப்பூருக்கு போகணும்னா ஏர்போர்ட்டுக்கு போகணும்...’ என்றார் மெதுவான குரலில்.


‘சும்மா இருங்க தலை... நாம அம்மாவைப் பார்க்கப் போறோம்...’ என்றார்கள் காருக்குள் இருந்தவர்கள்.


‘அம்மாவா... அவங்க திருவான்மியூர் வீட்டுல இருக்காங்க...’ என்றார்.


‘அட... அம்மான்னா தமிழ்நாட்டுக்கே அம்மா... தலையோட அம்மா இல்லை! நீங்க சம்மதிக்க மாட்டீங்கனுதான் ஷூட்டிங்னு சொன்னோம்’ என்று டிரைவர் சீட்டில் இருந்தவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வண்டி கொடநாடு எஸ்டேட்டுக்குள் புகுந்து பங்களா வாசலில் பிரேக் அடித்து நின்றது.


வாசலுக்கு வந்து வரவேற்ற ஜெயலலிதா, ‘என்ன அஜீத்... பசங்க ரொம்ப சிரமப்படுத்திட்டாங்களா... என்னப்பா, காஸ்டியூம் ரெடியா இருக்கில்லே... அஜீத்... நீங்க அ.தி.மு.க-வுல சேர்றீங்க... போட்டோகிராபரைக் கூப்பிடுப்பா...’ என்று சொல்லிக் கொண்டே போக, அஜீத் கண்களெல்லாம் கலங்கிவிட்டது.


‘மேடம்... நான் சினிமா பத்தியே பேஸ்மாட்டேன்... இதிலே அரசியல் பத்தி பேஸ் சொன்னா ரொம்பக் கஷ்டம்... அசல் ஷூட்டிங்னு சொல்லித்தான் கூட்டிட்டு வந்தாங்க... என்னை விட்ருங்க... நான் தனியாளு இல்லை... அது!’ என்றார் அழுதபடியே.


‘அஜீத்... ஏன் எமோஷனல் ஆகறீங்க... விஜய்தானே உங்க எதிரி... அவர் எந்த அணியில் இருக்காரோ அதுக்கு எதிர் அணியில்தானே நீங்க இருக்கணும். அவர் காங்கிரஸில் இருந்தா நீங்க இங்கே இருக்கறதுதானே சரி! என்ன சொல்றீங்க... காஸ்டியூமை மாத்திடலாமா...’ என்றார்.

‘மேடம்.. என் பிரச்னையைப் புரிஞ்சுக்கோங்க... முது தண்டுவடத்தில் ஒன்பது ஆபரேஷன் பண்ணியிருக்கேன்... அதோடு காலில் விழ ஆரம்பிச்சேன்னா என் எதிர்காலம் ஸ்பாயிலாகிடும்... ப்ளீஸ், நான் இறங்கிப் போறவன் இல்லை, கிறங்கிப் போறவன்... அது!’ என்று கேவிக் கேவி அழ ஆரம்பித்துவிட்டார்.

என்ன அழுதாலும் பஞ்ச் டயலாக்கை விட மாட்டேங்கறாரே! என்ற யோசனையோடு ஜெயலலிதா திரும்ப, காரைக்கூட எதிர்பார்க்காமல் ஓட்டம் எடுத்தார் அஜீத்.

விக்ரம் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்க சுற்றிலும் இல. கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், திருநாவுக்கரசர் என்று பி.ஜே.பி. தலைவர்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் போல நின்று கொண்டிருந்தார்கள்.

‘சொல்லுங்க... கடைசியா நீங்க நடிச்ச படம் பேரு என்ன?’ இல.கணேசன் உறுமலாகக் கேட்டார்.

தொண்டைக்குள்ளேயே விழுங்கிய குரலில் விக்ரம் சொன்னார்.

‘கந்தசாமி...’

‘அப்புறம் அதைவிட என்ன தகுதி வேணும்... வாங்க, பி.ஜே.பி.-யிலே சேர்ந்திடுங்க... ஆனா, பிரஸுக்கெல்லாம் நீங்கதான் சொல்லணும். நாங்க கூப்பிட்டா, அறிக்கையை ஃபேக்ஸில் அனுப்புங்கனு சொல்லிடுவாங்க...’ என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

‘சார்... அப்போ நான் சேதுவுல நடிச்சதும் கீழ்ப்பாக்கத்திலேயோ ஏர்வாடியிலேயோதான் வீடு பாத்திருக்கணுமா... என்ன பேசறீங்க நீங்க? நாங்க கலைஞர்கள்... கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள்...’ என்று குமுறினார்.

‘ஓகே விக்ரம்... ,முதலில் கட்சியில் சேர்ந்திடுங்க... அப்புறம் அடுத்த நாளே பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான்கான் எங்க வீட்டிலே இட்லி சாப்பிட்டிருக்கார்...னு ஒரு பேட்டியைக் குடுங்க... உடனே நாங்க உங்களை கட்சியை விட்டு நீக்கிடுறோம்... கொஞ்சநாள் எங்களைப் பத்தியும் பரபரப்பா ஏதாவது எழுதுவாங்க... ரகசிய தெனாலிக்கு வேணா ஸ்கூப் நியூஸ் கொடுத்திடட்டுமா... ப்ளீஸ்!’ என்றார் திருநாவுக்கரசர்.

மயக்கம் போடுவதைத் தவிர வேறுவழியில்லை என்று ஐடியா பண்ணிய விக்ரம், டக்கென்று நாற்காலியில் இருந்து மயங்கிச் சரிந்தார்.

தைலாபுரம் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தார் ராமதாஸ். கண்கள் அடிக்கடி வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தன. சிறிதுநேரத்தில் ஒரு கார் வந்து நிற்க, அதிலிருந்து இறங்கினார் தனுஷ்.

‘என்னப்பா... ரஜினியைக் கூட்டிட்டு வாங்கன்னா இவரைக் கூட்டிட்டு வந்திருக்கீங்க... ஏம்பா... உனக்கு வோட்டு இருக்கா...’

‘சார்... நான் பார்க்கத்தான் சுள்ளானா இருப்பேன்... சூடானா சுளுக்கு எடுத்துடுவேன்... என்னைப் பார்த்து என்ன கேட்கறீங்க..?’ என்றார் கோபமாக.

‘சுளுக்கு எடுப்பீங்களா... நல்லது தம்பி... யாருப்பா அங்கே... மக்கள் தொலைக்காட்சியிலே இயற்கை வைத்தியம்னு ஒரு நிகழ்ச்சி இருக்கு இல்லையா... அதிலே தம்பியை சுளுக்கு எடுக்கறது எப்படினு பேசச் சொல்லுங்க... நாங்க அரசியலுக்கு ஆள் தேடுறோம்... நீங்க போயிட்டு வாங்க!’ என்று அனுப்பி வைத்தார்.

ம.தி.மு.க.-வின் தாயகத்திலே வைகோவுக்கு எதிரே உட்கார்ந்திருந்தார் சிம்பு.

‘சார்... உங்க ஆளுங்க என்னை தப்பாக் கூட்டிட்டு வந்துட்டாங்க... ஆக்சுவலி என் பிரச்னை என்னன்னா எனக்கு நடிக்கத் தெரியாது...’ என்றதும் வைகோ இடைமறித்தார்.

‘அது உன் பிரச்னை இல்லை தம்பி... நாட்டு மக்களோட பிரச்னை... பெரிய நட்சத்திரங்களை பெரிய கட்சிகள் இழுத்துட்டாங்க... நாங்க வளரும் கட்சிதானே... கொள்கைகளின் அடிப்படையில் நாங்க கட்சி நடத்துறோம்... கோடிகளை வெச்சு இல்லை! அப்புறம் என்ன சொன்னே... நடிக்கத் தெரியாதா... ம.தி.மு.க உறுப்பினராகிடு... முதலில் உனக்கு நான் நடிக்க கத்துக் கொடுக்கறேன்... மேடையில் எப்படி உணர்ச்சிகளைக் கொட்டி பேசணும்... நடுவுல அழுது எப்படி கவர் பண்ணனும்... எல்லாம் நான் சொல்லித் தர்றேன்...’ என்றார்.

சிம்புவோ, ஆக்சுவலி எனக்கு நடிக்கத் தெரியாது என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.

‘தம்பி சிம்பு... அமெரிக்க அரசியல் வானிலே ரீகன் என்றொரு தலைவன் உதித்தானே... அதுபோன்றதொரு நன்னாள் இது... எங்கள் இயக்கத்திலே உன்னை இணைத்துக் கொள்!’ என்றதும், சிம்பு கொஞ்சம் டர்ராகி எஸ்கேப் விட்டார்.

இந்த கட்சிகளெல்லாம் நட்சத்திரங்களோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்த நேரத்தில் எல்லாம் வடிவேலு ஒவ்வொரு கட்சி ஆபீஸாக போன் போட்டு, ‘என்னை உங்க கட்சியிலே சேர்த்துக்கங்கய்யா... நானும் ஒரு அரசியல்வாதியா ஃபார்ம் ஆகிட்டேன்... விஜயகாந்தை எதிர்த்து அறிக்கையெல்லாம் விட்டேன்யா... நீங்க சேர்த்துக்கலைன்னா என்னை அரசியல்வாதினு யாரும் நம்ப மாட்டாங்க... அடுத்த தீபாவளிக்கு ஆதித்யா சேனல்ல பேட்டி எடுத்துப் போட்டுருவாங்க... என்னையும் சேர்த்துக்கங்கய்யா...’ என்று மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார்.

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்