கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படுவதாக இருந்த 55வது தேசிய திரைப்பட விருதுகள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவையொட்டி தள்ளிவைக்கப்பட்டு, இன்று அறிவிக்கப்பட்டன.

2007 ஆம் ஆண்டுக்கான இந்த விருதுகளை சாய் பராஞ்பே தலைமையிலான நடுவர் குழு சுமார் 120 திரைப்படங்களிலிருந்து தேர்வு செய்துள்ளது.

ப்‌ரியதர்ஷன் எழுதி, இயக்கிய காஞ்சீவரம் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரு விருதுகளை பெற்றுள்ளது. சுதந்திர காலத்துக்கு முந்தைய காஞ்சி பட்டு நெசவாளர்களின் வறுமை மிகுந்த வாழ்க்கையை இந்தப் படத்தில் உயிரோட்டமாக செதுக்கியிருந்தார் ப்‌ரியதர்ஷன். இந்தப் படத்தில் நெசவாளராக பிரதான வேடத்தில் நடித்த பிரகாஷ்ரா‌ஜ் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கன்னடத்தின் புகழ்பெற்ற இயக்குனர் கி‌ரிஷ் காசரவல்லி இயக்கிய குலாபி டாக்கீஸ் படத்தில் நடித்த உமா ஸ்ரீ ‌சிற‌ந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஷாருக்கான் நடித்த சக் தே இந்தியா சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த குடும்ப நல படமாக தாரே ஜமீன் பர் தேர்வாகியுள்ளது. அமீர்கான் இயக்கிய முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் மே‌ரி மா என்று தொடங்கும் பாடலை பாடிய சங்கர் மகாதேவன் சிறந்த பாடகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

காந்திக்கும் அவரது மூத்த மகனுக்கும் இடையிலான உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட காந்தி மை ஃபாதர் மூன்று விருதுகளை வென்றுள்ளது. இந்தப் படத்துக்காக பெரோஸ் அப்பாஸ் சிறந்த திரைக்கதைக்கான விருதையும், தர்ஷன் ஜா‌ரிவாலா சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பெறுகின்றனர்.

சிறந்த இயக்குனராக அடூர் கோபாலகிருஷ்ணன் ஏழாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவொரு சாதனை. தகழி சிவசங்கரபிள்ளையின் கதைகளை தழுவி அவர் எடுத்த நாலு பெண்ணுங்கள் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான விருது அவருக்கு கிடைத்துள்ளது.

பல வருடங்களுக்குப் பிறகு தமிழுக்கு சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் என்ற இருபெரும் விருதுகள் கிடைத்துள்ளன. வாழ்த்துக்கு‌ரியவர் இயக்குனர் ப்‌ரியதர்ஷன்.

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்